சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

10.602   திருமூலர்   திருமந்திரம்

-
இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.


[ 1]


தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாடந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.


[ 2]


தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.


[ 3]


உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.


[ 4]


குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற்
றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.


[ 5]


Go to top
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.


[ 6]


இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.


[ 7]


திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.


[ 8]


திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.


[ 9]


மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.


[ 10]


Go to top
கழலார் கமலத் திருவடி யென்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.


[ 11]


முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.


[ 12]


வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.


[ 13]


அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.


[ 14]


மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே. 3,


[ 15]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song